Tuesday 14 September 2010

தேங்காயும் நாயும் ஒன்று..

இந்திய நாட்டில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் இந்துக்களிடையே ஒரு வழக்கம் இருப்பதைப் பார்க்கலாம். எந்தச் சடங்கு நடைபெற்றாலும் நிச்சயமாய்த் தேங்காய் இருக்கும்.

மூன்று கண்களை உடையது தேங்காய். சிவனுக்குப் பெயரே முக்கண்ணர். தேங்காய்க்குமத் ஓடு துணை, சிவனுக்கும் ஓடு துணை.

ஆனால் காளமேகம் தேங்காயை நாய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் எப்படி?

"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".

நாய் எப்போதும் அலைந்துகொண்டே திரியும். நாய்க்கு வேலையும் இல்லை. இருக்க நேரமும் இல்லை என்பது பழமொழி. நாய் ஓடும். இருக்கும். தேங்காய்க்கு ஓடும் இருக்கும் நாய் வாயின் உட்புறம் வெளிறிப்போய் இருக்கும். தேங்காயை உடைத்தால் அதன் குழிந்த உட்புறம் வெளுத்திருக்கும். கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியை உள்வாய் என்பார்கள். தேங்காயின் நீர்ப்பிடிப்புப் பகுதி தேங்காயின் உள்வாய். நாய் தனக்கு விருப்பமுள்ள குலைத்தலைச் (குரைத்தல் என்பது வழக்கில் குலைத்தல் ஆனது) செய்வதற்கு வெட்கப்படாது. அதுபோல் பலரும் காணத் தேங்காய் தன் குலையில் இருக்க வெட்கப்படாது. இவ்விதம் இரண்டுக்கும் உள்ள ஒப்புவமையை வெளியிடுகிறார் காளமேகம்.


Friday 10 September 2010

மோருடன் அளவு கடந்த தண்ணீர்...

தெருவிலே ஓர் ஆய்ச்சி மோர் விற்றுக்கொண்டு வந்தாள். "மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டார் நண்பர்.

"ஓ சாப்பிடலாமே!"என்றார் காளமேகம்.
.
ஆய்ச்சி, கூடையை இறக்கி, மோரை மொண்டு ஒரு பாத்திரத்திலே ஊற்றினாள்.

காளமேகம் அம்மோரைக் கையில் வாங்கிக் கொண்டதும் "இது என்ன வெண்ணீரா?" என்றார்.
வெண்ணீர் என்று சொன்னதை, வெந்நீர் எனப் பிழையாக உணர்ந்து, சுடுகிறது என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று கருதி ஆய்ச்சி "இந்த வெயிலிலே சுடாமல் என்ன செய்யும் ஐயா?"என்றாள்.

"இல்லைம்மா! நான் வெந்நீரா என்று கேட்கவில்லை வெண்மையான நீரா என்று கேட்டேன். ஒரே நீராய் இருக்கிறதே. மோரைக் காணோமே"என்றார் காளமேகம்.

"கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்துரையில் வந்ததற்பின்
வாரொன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.!"

என்று மோரைப் பார்த்துப் பாடினார் காளமேகப்புலவர்.

வானத்தில் (ககனம்) இருக்கும்போது மேகம் (கார்) என்று பெயர் பெற்றாய்! பின் மழையாய் நீ பெய்து தரையை அடைந்ததும் நீர் என்று பேர் படைத்தாய். கச்சணிந்த (வார் -கச்சு , இரவிக்கை) ஆய்ச்சியிடம் வந்த பிறகு மோர் என்று பேர் படைத்தாய். இவ்வாறு நீரே நீ இடத்திற்குத் தக்கபடி மூன்று பேரும் பெற்றுவிட்டாய்.

இவ்வாறு பாடியதன் மூலம் ஆய்ச்சியின் மோருடன் அளவு கடந்த தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை மறை பொருளில் பாடினார் காளமேகம்.