Thursday 29 July 2010

ஒரு கோட்டானைப் பெற்றவள்..


கவி காளமேகம் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள தில்லை மூவாயிரவர்கள் சிறந்த சிவபக்தர்கள், ஒற்றுமையில் சிறந்தவர்கள், அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது நடராஜர் கோவில்.

புலவர் தில்லைக்கு வந்திருந்த செய்தியைக் கேட்டு பலர் அவரை சென்று சந்தித்தனர். அவர்களில் சிலர் தில்லை மூவாயிரவர்களை சேர்ந்தவர்கள், அவர்களுடன் கோவிலுக்கு சென்ற காளமேகம் ஆடியபாதரை வணங்கி, திருநீற்று பிரசாதம் பெற்றுத்திரும்புகிற சமயம், ஒரு பக்தர் அம்பலவானரைப் பற்றி பாடசொல்லி வேண்டினார்.

நையாண்டிக்கு பேர் போனவர் அல்லவா காளமேகம் அவர் தனது பாணியிலேயே பாடினார்..

"மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லை நகர்
ஆட்டுக்கோ னுக்குபெண் டாயினால் - கேட்டிலையோ
குட்டி மறிக்க கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்".

பாடலைக் கேட்டதும் சிவபக்தருக்கு கோபம் வந்துவிட்டது..

"என்னய்யா! சிவபெருமானை கோனார் என்று சொல்லிவிட்டீரே!" என்று கேட்டார் கோபமாக...

"நான் எங்கே சிவபெருமானை கோனார் என்றேன்?" என்று கேட்டார் காளமேகம்.

அதற்க்கு சிவபக்தர் " ஏன் இல்லை? ஆட்டுக்கோன் என்றீரே! என்று கேட்டார்.

ஆமாம்! சொன்னேன்! பாட்டின் முழுப் பொருளையும் நீர் அறிய வில்லை.. சொல்கிறேன் கேளும்..

"மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் இடையர் தலைவனான கண்ணனின் தங்கையான உமை, வடமதுரையை விட்டு வந்து , ஆடவ அரசனான (ஆட்டுக்கோன்) சிவபெருமானுக்கு மனைவியானாள், அதோடு மட்டுமில்லாமல் வழியில் போவோர் வருவோரை எல்லாம் தலையில் குட்டிக்கொண்டு நிக்க வைக்க, ஒரு தந்தத்தை உடைய கணபதியை (ஒரு கோட்டானை) பெற்றாள், அப்படி பெற்ற உமாதேவி மணிகள் அணிந்த சிறிய இடையை (சிற்றிடைச்சி) உடையவள் ஆகவே இருக்கிறாள்" என்று கூறி முடித்தார்.

சிவபக்தருக்கு மகிழ்ச்சியடைந்து, "கவி என்றால் இதுவன்றோ கவி" என்று புகழ்ந்தார்...


Thursday 22 July 2010

சிலேடை, நையாண்டிப் பாடல்கள்...

சிலேடை என்பது ஒரு அலங்காரம். ஒரு பொருள் தரும் சொல் வேறு ஒரு பொருளையும் மறைமுகமாய்க் குறிக்குமானால் அது சிலேடை ஆகும்.

ஏசல் என்பது நேரடியாக சொல்லி இடித்து உரைப்பதே ஆகும். ஜாடை என்பது மறைமுகமாக சொல்வதாகும். பொதுவாக ஜாடை பேசுவதில் எப்போதும் பெண்கள் கைதேர்ந்தவர்களாவர். இப்படி ஜாடையாக கேலி செய்யும் போது கேலிக்குரியவர்கள் தங்களைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வர். ஆனால் தம்மைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்று யாராலும் நிறுவ முடியாதது இதன் சிறப்பம்சம்.

சிலேடை நயத்துடன் எழுதப்படும் கவிகள் அந்தக்காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்டதுடன், புகழ் பெற்றும் விளங்கியது.

சிலேடையாகவும், நையாண்டியாகவும் பாடுவதில் சிறந்து விளங்கியவர் கவி காளமேகப் புலவர்.

காளம் என்றால் கரிய என்று பொருள், காளமேகம் என்பது கறுத்த மழை மேகத்தைக் குறிக்கும். காளமேகத்தில் சற்று குளிர்ந்த காற்று பட்டால் போதும் மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிடும்.

அதேபோல, கவி காளமேகமும் கவிமழை பொழிவதில் வல்லவர் என்று போற்றப்படுகிறார்.

இனி வரும் பதிவுகளில் இந்த சிலேடை பாடல்கள் பற்றிப் பார்க்கலாம்...