Monday 20 December 2010

பிச்சாடண மூர்த்தி..

தில்லைச் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் பிச்சாடண மூர்த்தியாகச் சிவபெருமான் ஊர்வலமாய் வரும் உற்சவம் நடக்கும். அதாவது,

நடராஜரை ஆடிய பாதமாக அல்லாமல் பிச்சை எடுக்கும் வேடத்தில் உற்சவ மூர்த்தியாய் எடுத்துவருவார்கள். அப்போது,

யானை எல்லா அலங்காரங்களுடனும் முன்னே செல்லும், அபோது எக்காளம் எனப்படும் வாத்தியக் கருவி இசைப்பார்கள். தாளங்கள் முழங்கும். பெரிய ராஜ மரியாதையுடன் பிச்சாடண மூர்த்தி எழுந்தருளுவார்.

இந்தக் கோலத்தைப் பார்த்த காளமேகம், இகழ்வது போலப் போற்றிப் பாடுகிறார்.

"நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சைஎடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம்

காளம்ஏன்? குஞ்சரம்ஏன்? கார்கடல்போல் தான்முழங்கும்
மேளம் ஏன்? ராஜாங்கம் ஏன்?."


நச்சுப் பாம்பை அணிந்த தில்லை நாதரே! நீர் பிச்சை எடுத்துச் சாப்பிடப் புறப்பட்டு விட்டீர். இந்த லட்சணத்தில் உமக்கு சிறப்பான(உச்சிதமாம்) எக்காளம் எதற்க்கு? யானை எதற்க்கு? கரிய நிறமுள்ள கடலைப் போல முழங்கும் மேளம் எதற்க்கு? இத்தனை ராஜ மரியாதை எதற்கு என்று கேட்கிறார் காளமேகம்.


Monday 6 December 2010

சிவனுக்கு எத்தனை கண்..

சிவபெருமானுக்கு நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் என்பார்கள். இதனால் முக்கண்ணன் என்றா காரண பெயரும் அவர்க்கு உண்டு.

ஆனால், காளமேகப் புலவரோ, ஒரு கணக்கிட்டு கழித்துக் கழித்துக் கடைசியில் சிவபெருமானுக்கு அரைக் கண் மட்டுமே சொந்தம் என்கிறார்.

எப்படி?

சிவனுக்கு மூன்று கண்கள் தான். ஆனால், அவர் உடலில் சரி பாதியாக இருப்பவர் உமை தானே. அப்படியானால் சிவனின் மூன்று கண்களில் உமைக்கு ஒன்றரைக் கண் சொந்தமாகிறது ஆக மிச்சமாக இருப்பது ஒன்றரைக் கண்.

அந்த ஒன்றரைக் கண்ணிலும், ஒரு கண் வேடன் கன்னப்பனால் கொடுக்கப் பட்டது. அதனால் அந்தக் கண்ணும் சிவனுக்கு சொந்தமானது அல்ல இரவல் வாங்கிய கண். எனவே ஒன்றரையில் இருந்து ஒன்று போனால் அரைக் கண்ணே மிகுதி ஆகிறது. ஆக சிவனுக்கு அரைக் கண் தான் என்று பாடுகிறார் காளமேகம்..

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!