Sunday 17 October 2010

எலுமிச்சம் பழமாகும் பாம்பு..

"பெரியவிடமே சேரும் பித்தர்முடி ஏறும்
அரியுண்ணும் உப்புமே லாடும் - எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம்."


பெரியவிடமே சேரும் - பாம்புக்கு அதிகமான விஷம் இருக்கும். அது, பித்தனான சிவபெருமான் தiலியல் ஏறி இருக்கும். அரி என்பது காற்று, பாம்பு காற்றைக் குடித்து உடலைத் தேற்றிக் கொள்ளும். பாம்பை அடித்துக் குற்றுயிராய் விட்டுவிட்டால் அது காற்றைக் குடித்து உடலை வளர்த்துப் பிழைத்துக் கொள்ளும். மேலாடும் - தலையைத் தூக்கி மறுபடியும் படமெடுத்து ஆடும். எரிகுணம் ஆம் - மிகவும் சினம் கொள்ளும் இயல்புள்ளது.எலுமிச்சம்பழம், பெரிய இடமே சேரும் - பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது, கையுறையாகக் கொடுப்பதற்கு எலுமிச்சம்பழம் பயன்படும். பித்தர் முடி ஏறும் - பைத்தியம் பிடித்தவர்களின் தiலியல் தேய்க்கப் பயன்படும். அரியுண்ணும் - அறுக்கப்படும். உப்பு மேலாடும் - உப்பிடப்பட்டு ஊறுகாயாகும். எரிகுணம் ஆம் - புண் அல்லது அரித்த இடத்தில் தேய்த்தால் எரிச்சலை உண்டாக்கும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் ஆகும்.

காளமேகம் எலுமிச்சம்பழத்துக்கும் பாம்புக்கும் இணை வைத்துப் பாடியதை எல்லோரும் பாராட்டினர்

இதேபோல்,

யானையையும் ஆமணக்குச் செடியையும் ஒப்பிட்டு இன்னொரு பாடலைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காளமேகம் பாடினார்.

"முத்திருக்கும்கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் - எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை ஆம்."


ஆமணக்கு, எண்ணெய் ஆட்டுதற்குரிய முத்துகளை உடையதாய் இருக்கும். காற்றில் அது தன் சிறிய கொம்புகளை அசைக்கும். தடித்த தண்டுகளையுடைய கிளைகளை ஏந்தி வளரும். முத்திருக்கும் காய்களைக் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்.மால் யானையின் விளைந்த தந்தத்தின் முத்திருக்கும் என்பார்கள். அது அல்லாமமல் தந்தத்தின் அடிப்பாகத்தில் முத்துக்களால் ஆன மாலையை அழகுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தத் தந்தத்தின் துணை கொண்டு பெரிய மரங்களைத் தூக்கிவரும் கொம்பசைக்கும். அந்தத் தந்தங்களை இங்கும் அங்குமாய் அசைத்த்படி ஆடிக்கொண்டே நிற்கும். நிமிர்ந்து நிற்கும் வாழைமரத்தின் பழுத்த குலைகளைச் சாய்த்து வீழ்த்திச் சாப்பிடும். இவ்வாறு, தேன் பொழியும் சோலைத் திருமலை ராயன் மலையில் ஆமணக்கும் யானை ஆகும்.

இதைக் கேட்ட நண்பர்கள் காளமேகத்தை புகழ்ந்தனர்..


Sunday 3 October 2010

பாம்பாகும் பழங்கள்...

"காளமேகம் கழுதையும் குதிரையையும் கூட ஒன்றாக்கிப் பாட்டியற்றி விடுவார்" என்று எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டார்கள். எல்லாவற்றையுமே இணைத்து விடமுடியாது. அது மிகவம் சிரமம். சில ஒத்து வரும், சில ஒத்து வரா. ஆகையால் ஒரு நாள் கவிநயம் தெரிந்த ஓர் அன்பர், கவிஞர் காளமேகத்தைப் பார்த்து, "புலவர் ஐயா! பாம்பை எதற்கு ஒப்பிடலாம்?" என்று கேட்டார். பக்கத்திலிருந்த மற்ற நண்பர்களும் இரசிகர்களும் காளமேகத்தைப் பார்த்தனர்.

"பழங்கள் பாம்புக்கு ஒப்பாகும்" என்றார், காளமேகம்.

"என் குடத்திற்குள் அடைந்த மாதிரி புளித்துக் காடியான பழங்கள்ளையா சொல்கிறீர்கள்? அது ஆடிய பின் குடத்திற்குள் அடையாதே. அது கடத்திற்குள் புகுந்த பின்னர்தானே ஆட முடியும்?" என்றார் கவிநயம் தெரிந்த நண்பர்.

காளமேகம் சிரித்தார். "ஏதேது நீங்களும் இப்படி எல்லாம் சிலேடையாகப் பேச ஆரம்பித்து விட்டீர்கள்!" என்றார்.

"கம்பன் வீட்டுக் கட்டுத்துறையும் கவி பாடும் என்பார்கள். காளமேகத்தின் நண்பர் இந்த அளவு சிலேடை பேசாவிட்டால் கவிஞருக்கல்லவோ கெட்ட பெயர்" என்றார் நண்பர்."நான் கள்ளைச் சொல்லவில்லை. பழங்களைச் சொல்கிறேன். வாழைப்பழத்தையும் எலுமிச்சம்பத்தையும் உவமையாக்கி ஒப்பிடலாம்" என்றார் காளமேகம்.

பலரும் பாடச் சொன்னார்கள். காளமேகம் பாடினார்...

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்"

கவிநயம் அறிந்த நண்பர் "ஆஹா! ஆஹா!" என்று வியந்து கூவினார். மற்றவர்கள் சரியானபடி விளங்கிக் கொள்ளாமல் "கொஞ்சம் புரியுது. சில இடங்கள் புரியவில்லை" என்றனர். காளமேகம் கவிநயமறிந்த நண்பரை, பாட்டை விளக்கிக் கூறும்படி கட்டளையிட்டார். அவவாறே அந்த நண்பர் விளக்கினார்.

"பாம்பிடம் நஞ்சு இருக்கும். பழம் அதிகம் பழுத்து விட்டால் நஞ்சு. அதாவது நைந்து இருக்கும். பாம்பு தன் தோலான சட்டையை உரித்துக் கொள்ளும். அதன் மூலம் அது வளர்ந்து உரிய பக்குவத்தை அடைகிறது. வாழைப்பழத்தோலை உரித்தால்தான் அது சாப்பிடும் பக்குவத்தை அடைகிறது. பாம்பு சிவநாதர் சிரசில் (கழுத்திலும்) ஜடாமுடியைச் சுற்றியிருக்கும். பழமும் பஞ்சாமிர்தத்தில் சேர்ந்து அபிஷேகத்தின் போது சிவபெருமான் சிலையின் உச்சியில் இருக்கும். அப்பி வைக்கப்பட்டு பாம்பு வெம்சினம் கொண்டு தீண்டி, அதன் பற்பட்டால் ஆள் உயிரோடு மீள்வது கடினம். வாழைப்பழம் துணை உணவாக (வியஞ்சனம் - வெஞ்சனம் - வெஞ்சினம்) கொள்ளுமிடத்து பற்களிடையே பட்டால் அது வயிற்றுனுள் செல்வது தப்பாது. இவ்வாறு பாம்பும் வாழைப்பழமும் சமம்". இது கேட்டு எல்லோரும் பாராட்டினர். பின்,

"அடுத்து எலுமிச்சம்பழப் பாடலையும் சொல்லுங்கள்" என்றார்கள்... அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்...