Monday 8 November 2010

ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே..

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருடோற்சவம் நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

பக்தர்கள் கூட்டத்துடன் காளமேகமும் பெருமாளைத் தரிசிக்கச் சென்றிருந்தார். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவரிடம் காளமேகம் கேட்டார். "கருடோற்சவம் என்று சொன்னார்கள் பெருமாளை மனிதர்கள் தானே தூக்கிச் செல்கிறார்கள்." என்றார்.

உடனே அந்த வைணவ பக்த்தருக்கு கோவம் வந்துவிட்டது. உடனே அவர் " யோவ்! பெருமாள் கருடன் மீது ஆரோகணித்து இருக்கிறார். கருடன்தான் தூக்கி சுமக்கிறது" என்றார்.

"அப்படியா கருடன்தான் தூக்கி சுமக்கிறதா?" என்று கேட்ட காளமேகம். உடனே பின்வரும் பாடலைப் பாடினார்.

"பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால் ஐயோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்"


"பெருமாள் பேசாமல் கோவிலுக்குள் இருந்திருந்தால் பருந்து தூக்கிக் கொண்டு போகுமா?" என்று பொருள் வரும் படியாக தனது வழமையான கிண்டல் பாணியில் கவி பாடினார். இந்த பாடலைக் கேட்டவர்கள், "ஆஹா அருமையான நிந்தாஸ் துதி" என்று காளமேகத்தை புகழ்ந்தனர்.