Monday 26 November 2012

ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!


ஒரு சமயம் உறையூரிலே குலாத்துங்க சோழன், தன் சமஸ்தான வித்துவானான ஒட்டக்கூத்தரும் பட்டத்தரசியும் பாண்டி நாட்டிலிருந்து சீதனமாக வந்த புகழேந்திப்புலவரும் தொடர்ந்து வர, பாதசாரியாய் உலாவரும்போது வீதிகளிலொன்றில் ஒரு வீட்டுத் தெரு திண்ணையில் இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒளவையார், சோழனைக் கண்டவுடன் ஒருகாலை மடக்கிக் கொண்டனர். அருகிற் புகழேந்திப்புலவர் இருக்கிறதைப் பார்த்தவுடனே மற்றக் காலையும் மடக்கிக் கொண்டார். அவர்களை அடுத்தாற் போல வந்த ஒட்டக்கூத்தரைக் கண்டவுடனே இரண்டு கால்களையும் நீட்டினர். 

இதனைக் கண்ணுற்ற ஒட்டக்கூத்தர் அவமானமும் சீற்றமும் மூண்டவராய், ஒளவையாரை நோக்கி, "ஓ கிழவி! இவ்வாறு என்னை அவமதித்தது என்னை? எனக் கேட்க, அதற்கு ஒவையார், "அரசர் கிரீடாதிபதி என்பதால் அவருக்கு ஒரு காலையும், புகழேந்திப்புலவர் ஒரு மகா கவி என்பதால், அவருக்காக இரண்டு காலையும் மடக்கினேன், நீரோ, கல்வி நிறைவில்லாத வீண்புலமை பாராட்டுமொரு மூடர் என்பதால் இரண்டு கால்களையும் நீட்டினேன்" என்று சொல்லி, "உண்மையாகவே, நீரும் புகழேந்தியாரைப் போல ஒரு சிறந்த கவியாயின் சோழரையும் அவர் நாட்டையுஞ் சிறப்பித்துச் சந்திரனுக்குப் பெயராகும் ஒரு பதத்தை ஒரு பாவின் ஈற்றடியில் மூன்றிடங்களில் பிரயோகப்படுத்திப் பாடும் பார்ப்போம்" என்று சொனன்னார். 

ஒட்டக்கூத்தர் அவ்வாறே தம் அரசனாகிய சோழனையே பாட்டுடைத் தலைவனாக கருதி, நற்றாய் இரங்கல் துறையில்,

"வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகலைக் கிழித்துமழைத் துளயோ டிறக்குஞ் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டா கோபாலா!
பள்ளை மதிகண்டு இப்பேதை பெரிய மதியும் இழந்தாளே!"

என்று ஒரு பாட்டுப் பாடினார். இதைக்கேட்ட ஒளவையார், ஒட்டக்கூத்தரை நோக்கி, "உம் பாவில் ஒரு மதி குறந்ததே!" என்ற பொருளின் சிலேடையாக,

"ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!"

என்று கூறிப் பின்னர் புகழேந்தியாரை நோக்கி, "நீரும் அவ்வண்ணமாகப் பாடக்கடவீர்!"  என்றார். அவரும் நற்றாயிரங்கல் துறையிலேயே,

"பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கட் டெறியக் குரங்கள நீர் தனைக்கொண் டறயுந் தமிழ்நாடா!
கொங்கர்க் கமரா பதியளித்த கோவே! ராச குலதிலகா!
வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே!

எனறு ஒரு மூன்று பிறை வரும்படியாகப் பாடினார்.

இதனைக் கேட்டு ஒட்டக்கூத்தர் வெட்கி, அன்று முதலால் கர்வமடங்கியிருந்தார்.



Monday 6 June 2011

உதவியும்!...உயர்வும்!

இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன்.

அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான்.

தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எதாவது செய்ய விரும்பினான் குளத்தில் விழுந்த சிறுவன், அவன் விரும்பும் எதையம் தான் தருவதாகக் கூறினான். இடையனோ தனக்கு படிக்க வேண்டுமென ஆசையிருப்பதாக கூறினான். உடனே அவனும் தன் தந்தையிடம் கூறி இடையனின் படிப்புக்கு ஏற்பாடு செய்தான்.

அந்த இடையன் தான் உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங், குளத்தில் விழுந்த பணக்கார சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராயிருந்த வின்ஸ்டண்ட் சர்ச்சில்.


Monday 30 May 2011

கவிராயர்கள்..

ஒரு சமயம் பல கவி வாணர்கள் திருமலையானிடம் புகழும் மதிப்பும் பெற்ற காளமேகத்தை இழிவுபடுத்த எண்ணினார்கள். அவர்கள் அரச அவையில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்து கொண்டு காளமேகத்தை அலட்சியமாக பார்த்தபடி இருந்தார்கள்.

உள்ளே வந்த காளமேகம் அங்கு நின்ற சேவகனைப் பார்த்து " யார் இவர்கள் உயரத்தில் அமர்ந்திருக்கிறர்களே!" என்று கேட்டார். அதற்க்கு அந்த சேவகன் முன்பே அவர்கள் கூறியபடி "கவிராயர்கள்" என்றான்.

உடனே காளமேகம்..

வாலெங்கே? நீண்ட வயிறெங்கே, முன்னிரண்டு
காலெங்கே? உட்குழிந்த கண்ணெங்கே? - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்!


ராயர்கள் என்னும் சொல்லுக்கு ராஜர்கள் என்பது பொருள். கவி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு குரங்கு என்னும் பொருளும் உண்டு. அதாவது, "கபி" என்பது "கவி" என்று தமிழில் மருவிய்து. வட மொழியில் உள்ள 'ப' , 'வ' ஆகும்; பெங்கால், வங்காளம் ஆனது போல்..

புவிராயர் போற்றும் புலவர்கள் தான் என்று எண்ணியிருந்தேன், நீங்கள் "கவி" ராஜாக்கள் என்கிறீர்கள். குரங்குகளைப்போல் உயர்த்தில் இருந்தால் மட்டும் போதுமா? மற்ற அங்கங்களும் அழகும் வேண்டாமா? என்று கிண்டல் செய்தார்.