Sunday 3 October 2010

பாம்பாகும் பழங்கள்...

"காளமேகம் கழுதையும் குதிரையையும் கூட ஒன்றாக்கிப் பாட்டியற்றி விடுவார்" என்று எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டார்கள். எல்லாவற்றையுமே இணைத்து விடமுடியாது. அது மிகவம் சிரமம். சில ஒத்து வரும், சில ஒத்து வரா. ஆகையால் ஒரு நாள் கவிநயம் தெரிந்த ஓர் அன்பர், கவிஞர் காளமேகத்தைப் பார்த்து, "புலவர் ஐயா! பாம்பை எதற்கு ஒப்பிடலாம்?" என்று கேட்டார். பக்கத்திலிருந்த மற்ற நண்பர்களும் இரசிகர்களும் காளமேகத்தைப் பார்த்தனர்.

"பழங்கள் பாம்புக்கு ஒப்பாகும்" என்றார், காளமேகம்.

"என் குடத்திற்குள் அடைந்த மாதிரி புளித்துக் காடியான பழங்கள்ளையா சொல்கிறீர்கள்? அது ஆடிய பின் குடத்திற்குள் அடையாதே. அது கடத்திற்குள் புகுந்த பின்னர்தானே ஆட முடியும்?" என்றார் கவிநயம் தெரிந்த நண்பர்.

காளமேகம் சிரித்தார். "ஏதேது நீங்களும் இப்படி எல்லாம் சிலேடையாகப் பேச ஆரம்பித்து விட்டீர்கள்!" என்றார்.

"கம்பன் வீட்டுக் கட்டுத்துறையும் கவி பாடும் என்பார்கள். காளமேகத்தின் நண்பர் இந்த அளவு சிலேடை பேசாவிட்டால் கவிஞருக்கல்லவோ கெட்ட பெயர்" என்றார் நண்பர்."நான் கள்ளைச் சொல்லவில்லை. பழங்களைச் சொல்கிறேன். வாழைப்பழத்தையும் எலுமிச்சம்பத்தையும் உவமையாக்கி ஒப்பிடலாம்" என்றார் காளமேகம்.

பலரும் பாடச் சொன்னார்கள். காளமேகம் பாடினார்...

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்"

கவிநயம் அறிந்த நண்பர் "ஆஹா! ஆஹா!" என்று வியந்து கூவினார். மற்றவர்கள் சரியானபடி விளங்கிக் கொள்ளாமல் "கொஞ்சம் புரியுது. சில இடங்கள் புரியவில்லை" என்றனர். காளமேகம் கவிநயமறிந்த நண்பரை, பாட்டை விளக்கிக் கூறும்படி கட்டளையிட்டார். அவவாறே அந்த நண்பர் விளக்கினார்.

"பாம்பிடம் நஞ்சு இருக்கும். பழம் அதிகம் பழுத்து விட்டால் நஞ்சு. அதாவது நைந்து இருக்கும். பாம்பு தன் தோலான சட்டையை உரித்துக் கொள்ளும். அதன் மூலம் அது வளர்ந்து உரிய பக்குவத்தை அடைகிறது. வாழைப்பழத்தோலை உரித்தால்தான் அது சாப்பிடும் பக்குவத்தை அடைகிறது. பாம்பு சிவநாதர் சிரசில் (கழுத்திலும்) ஜடாமுடியைச் சுற்றியிருக்கும். பழமும் பஞ்சாமிர்தத்தில் சேர்ந்து அபிஷேகத்தின் போது சிவபெருமான் சிலையின் உச்சியில் இருக்கும். அப்பி வைக்கப்பட்டு பாம்பு வெம்சினம் கொண்டு தீண்டி, அதன் பற்பட்டால் ஆள் உயிரோடு மீள்வது கடினம். வாழைப்பழம் துணை உணவாக (வியஞ்சனம் - வெஞ்சனம் - வெஞ்சினம்) கொள்ளுமிடத்து பற்களிடையே பட்டால் அது வயிற்றுனுள் செல்வது தப்பாது. இவ்வாறு பாம்பும் வாழைப்பழமும் சமம்". இது கேட்டு எல்லோரும் பாராட்டினர். பின்,

"அடுத்து எலுமிச்சம்பழப் பாடலையும் சொல்லுங்கள்" என்றார்கள்... அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்...



Post a Comment

6 comments:

  1. எலுமிச்சம்பழம் ....

    சொல்லுங்க தோழி...
    தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  2. சிலேடைப் பற்றியப் பதிவு மிக அழகு. தாய்த்தமிழின் ஆழம், அழகு, கருத்துச்செறிவு, சொல்லாடல், பொருள், அப்பப்பா.....
    நினைக்க நினைக்க திகைக்க வைக்கும் தேன்சுவைத் தமிழ். நிறைப் படிக்க ஆசை. தொடருங்கள் இது போன்றதோர் பதிவை. நன்றி.

    ReplyDelete
  3. அருமை பகிர்விற்கு நன்றி தோழி

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு.
    வியஞ்சனம்-வெஞ்சனம்-வெஞ்சினம் - பற்றி மேலும் கூறுங்கள். நன்றி.

    ReplyDelete