Friday 10 September 2010

மோருடன் அளவு கடந்த தண்ணீர்...

தெருவிலே ஓர் ஆய்ச்சி மோர் விற்றுக்கொண்டு வந்தாள். "மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டார் நண்பர்.

"ஓ சாப்பிடலாமே!"என்றார் காளமேகம்.
.
ஆய்ச்சி, கூடையை இறக்கி, மோரை மொண்டு ஒரு பாத்திரத்திலே ஊற்றினாள்.

காளமேகம் அம்மோரைக் கையில் வாங்கிக் கொண்டதும் "இது என்ன வெண்ணீரா?" என்றார்.
வெண்ணீர் என்று சொன்னதை, வெந்நீர் எனப் பிழையாக உணர்ந்து, சுடுகிறது என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று கருதி ஆய்ச்சி "இந்த வெயிலிலே சுடாமல் என்ன செய்யும் ஐயா?"என்றாள்.

"இல்லைம்மா! நான் வெந்நீரா என்று கேட்கவில்லை வெண்மையான நீரா என்று கேட்டேன். ஒரே நீராய் இருக்கிறதே. மோரைக் காணோமே"என்றார் காளமேகம்.

"கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்துரையில் வந்ததற்பின்
வாரொன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.!"

என்று மோரைப் பார்த்துப் பாடினார் காளமேகப்புலவர்.

வானத்தில் (ககனம்) இருக்கும்போது மேகம் (கார்) என்று பெயர் பெற்றாய்! பின் மழையாய் நீ பெய்து தரையை அடைந்ததும் நீர் என்று பேர் படைத்தாய். கச்சணிந்த (வார் -கச்சு , இரவிக்கை) ஆய்ச்சியிடம் வந்த பிறகு மோர் என்று பேர் படைத்தாய். இவ்வாறு நீரே நீ இடத்திற்குத் தக்கபடி மூன்று பேரும் பெற்றுவிட்டாய்.

இவ்வாறு பாடியதன் மூலம் ஆய்ச்சியின் மோருடன் அளவு கடந்த தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை மறை பொருளில் பாடினார் காளமேகம்.



Post a Comment

3 comments:

  1. அந்த காலத்துல தண்ணீர் பஞ்சம் எதும் இருந்திருக்காது அதான் தராளமா மோர்ல தண்ணீர் கலந்து இருக்கு அந்த அம்மா .. இப்போ முடியுமா..?

    ReplyDelete
  2. பள்ளியில் எப்போதோ படித்த ஞாபகம் .. நன்றி தோழி ...

    ReplyDelete
  3. எங்கேயோ படித்த நினைவு தோழி.

    ReplyDelete