Friday 18 June 2010

விவேக சிந்தாமணி - 10.

சேரும் இடத்தை பொறுத்தே சிறப்பு...

"கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா"

பொருள் :-

நினைத்ததெல்லாம் தரக்கூடிய கற்பக மரத்தில் போய் இருந்த காகத்துக்கும் அது நினைத்தால் அமுதத்தையும் உண்ணக் கூடியதாக இருக்கும். அது போல கல்வி அறிவில் வேந்தர் போல இருக்கும் நல்லோரை நாடி இருப்போர்க்கு நன்மையே விளையும். இதே போல விவேகமற்ற மூடரை சார்ந்திருப்போருக்கு இலவுகாத்த கிளி போல என்றும் நல்வாழ்வு கிட்டாது என்பது இதன் பொருள்.


Thursday 17 June 2010

விவேக சிந்தாமணி - 09.

குரங்குப் புத்தியும் கோணல் புத்தியும்


"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"


பொருள் :-

மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்கு ஒன்றைப் பார்த்து கவலைப் பட்ட தூக்கனாங்குருவி, அதனிடம் நீயும் என்னைப் போல ஒரு கூடு கட்டிக் கொண்டிருந்தால் இப்படி மழையில் நனைய வேண்டி வராதே என்றது. ஆத்திரம் கொண்ட குரங்கு தூக்கனாங் குருவியின் கூட்டினை பிய்த்து எறிந்தது. அதைப் போல அரிய நூல்களின் உயரிய கருத்துக்களை அறிவில்லாத மூடர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எவ்வித பயனும் இல்லை, துன்பமே விளையும் என்பது இதன் பொருள்.


விவேக சிந்தாமணி - 08.

தவளையின் குணமும் மடையர்கள் இயல்பும்


"தண்டா மரையின் உடன் பிறந்தும்
தன்தேன் நுகரா மண்டுகம்;
வண்டோ கானத்து இடையிருந்து
வந்தே கமல மதுஉண்ணும்!
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி
தமிமில் கலப்பார் கற்றோரே!''

பொருள் :-

குளிர்ந்த தாமரையில் சுரந்திருக்கும் சுவையான தேனின் அருமையினை அதே தடாகத்தில் வசிக்கும் தவளை அறியாது. ஆனால் எங்கோ காட்டிலிருக்கு வண்டானது தேடி வந்து தாமரையின் தேனை பருகி மகிழும்.இதைப் போலவே அறிவற்றவர்கள், தங்களுடன் பழகிவரும் நல்லோரின் சிறப்பினை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் கற்றறிந்தவர்கள் நல்லோரை தேடி இனம் கண்டு அவரோடு நட்பு பூண்டு அவர்களோடு இனைந்திருப்பர்... என்றும் சிறந்திருப்பர் என்பது இதன் பொருள்.